தினம் ஒரு தகவல் : ரெடிமேடு கட்டுமான கம்பிகள்

ரெடிமேடு சிமெண்டு கலவை குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். சிமெண்ட்டையும் மண்ணையும் சரியான விகிதத்தில் கலந்து, பின் அதை கட்டுமானத்துக்கு பயன்படுத்துவார்கள்.

Update: 2018-09-10 02:00 GMT
அதிக மனித உழைப்பையும், காலத்தையும் கோரும் வேலைகளுக்கு மாற்றாக ரெடி மிக்ஸ் சிமெண்டு வந்தது. இது முக்கியமாக பெரிய கட்டிடங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கிறது.

இதே போல் வேலை ஆட்களையும் காலத்தையும் குறைக்கும் பொருட்டு வந்துள்ள தொழில்நுட்பம்தான் ‘ரெடிமேடு ஸ்டீல்‘. பொதுவாக இன்றைக்குள்ள கட்டிடங்களுக்கு ஆதாரமாக இருப்பது கான்கிரீட்தான். இந்த கான்கிரீட்டின் ஆதாரம் கட்டுமான கம்பிகள்.

இந்த கம்பிகளை தேவைக்கு ஏற்ப வளைத்து கட்டுவது அதிக உழைப்பையும் காலத்தையும் எடுக்கும் வேலை. முதலில் கட்டுமானத்திற்கான இரும்பு கம்பிகளை வாங்கி வந்து கட்டிடத்திற்கு ஏற்றவாறு அதை வெட்டி, வளைத்துக்கொள்ள வேண்டும். இன்றைக்குள்ள இட நெருக்கடியில் இந்த மாதிரி வேலைகளுக்கு இடவசதியும் தேவைப்படும்.

கம்பிகளை கொண்டுவந்து சேர்க்கவும், அவற்றை வளைத்து கட்டவும் ஆட்கள் அதிக அளவில் தேவைப்படுவார்கள். இந்த மாதிரியான சிக்கல்கள் ஏதும் இல்லாமல் மிக எளிதாக கம்பிகளை கட்ட இந்த புதிய தொழில்நுட்பம் பயன்படுகிறது.

கட்டுமானத்திற்குரிய விவரங்களை அதாவது, ‘பார் பெண்டிங் செட்யூலை‘ முன்பே கொடுத்துவிட்டால் அதற்கு தகுந்தவாறு கம்பிகளை வளைத்து கட்டிட பணிகள் நடைபெறும் இடத்திற்கே அனுப்பி விடுவார்கள். அதை அப்படியே இறக்கி சிமெண்டு கலவைகளை இட்டாலே போதுமானது. இந்த முறையின் மூலம் கட்டிட செலவை ஓரளவு குறைக்க முடியும். பழைய முறைப்படி, கட்டிட பணிகள் நடக்கும் இடத்திலேயே கம்பிகளை வெட்டுவதால் நிறைய கம்பிகள் வீணாவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதாவது பழைய முறையில் 5 சதவீதம் வீணாகும் எனக் கொண்டால் இந்த புதிய தொழில்நுட்பத்தில் 1.5 சதவீதம்தான் வீணாகும்.

பழைய முறையில் கட்டுமானத்திற்கான கம்பிகளை நம்மால் உத்தேசமாகத்தான் கணக்கிட முடியும். அதனால் கட்டி முடித்த பிறகு கம்பிகள் மிஞ்சி வீணாகவும் வாய்ப்புண்டு. இந்த புதிய முறையில் ரெடிமேடு கம்பி கொடுக்கும் நிறுவனமே அதை உருவாக்கித் தருவதால் கம்பி வீணாவதும் தடுக்கப்படும். 

மேலும் செய்திகள்