2,979 மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

நெல்லை மாவட்டத்தில் 2,979 மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நேற்று நடந்தது.

Update: 2018-09-10 00:09 GMT
நெல்லை, 


இந்திய தேர்தல் ஆணையம் தமிழகம் முழுவதும் கடந்த 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. நெல்லை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஷில்பா வெளியிட்டார். நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பை, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராதாபுரம், நாங்குநேரி என 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

1-1-2019-ஐ தகுதிநாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6, நீக்கம் செய்ய படிவம் 7, இதர திருத்தங்களுக்கு படிவம் 8, சட்டசபை தொகுதிக்குள் பெயர் மாற்றம் செய்ய 8ஏ, வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பெயர் சேர்க்க 6ஏ ஆகியவற்றில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்வதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. நெல்லை மாவட்டத்தில் இந்த முகாம் 2 ஆயிரத்து 979 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடந்தது. ஒரு சில வாக்குச்சாவடியில் கூட்டம் அதிகமாக இருந்தது. சில வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பாளையங்கோட்டை தொகுதி வாக்குச்சாவடி மையங்களை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பார்வையிட்டார். நெல்லை சட்டசபை தொகுதி வாக்குச்சாவடிகளை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் பார்வையிட்டார். நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள வாக்குச்சாவடியை நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா பார்வையிட்டார். இதேபோல் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் அந்தந்த பகுதியில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டனர்.

வருகிற 23-ந் தேதி, அடுத்த மாதம் (அக்டோபர்) 7, 14 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. 

மேலும் செய்திகள்