22 இடங்களில் தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மாவட்டத்தில் 22 இடங்களில் தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 637 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-10 22:00 GMT
விழுப்புரம், 

பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று காலை விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஆர்.டி.வி. சீனிவாசக்குமார் தலைமையில் புறப்பட்ட ஊர்வலத்தை தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலத்தில் காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் தயானந்தம், அகில இந்திய உறுப்பினர் சிறுவைராமமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சுரேஷ்ராம், சிவா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராம், துணைத்தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார், பொதுச்செயலாளர்கள் ராஜேஷ், விஸ்வநாதன், தி.மு.க. சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், நகர தலைவர் சக்கரை, துணை செயலாளர் சோமு, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் குமரன் உள்பட பலர் கலந்துகொண்டு ஊர்வலமாக விழுப்புரம் பழைய பஸ் நிலையத்துக்கு சென்றனர். அதன் பின்னர் அங்கு பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம் அருகே ஒட்டன்காடுவெட்டி கிராமத்தில் நேற்று காலை மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி சார்பில் அதன் மாவட்ட துணைத்தலைவர் கண்ணம்மாள் தலைமையில் நிர்வாகி செண்பகவள்ளி உள்ளிட்டோர் ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
உடனே காணை போலீசார் விரைந்து சென்று ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 28 பேரை தடுத்து நிறுத்தி கைது செய்து அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல் செஞ்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரங்கபூபதி, தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 65 பேரும், உளுந்தூர்பேட்டையில் காங்கிரஸ் கட்சியின் தாலுகா தலைவர் ஷேக்தாவூத் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 45 பேரும் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர்கள் நிதானம், பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் ராமநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துக்குமரன், மூர்த்தி, கீதா, மாவட்டக்குழு உறுப்பினர் கண்ணப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். உடனே விழுப்புரம் மேற்கு போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 35 பேரை கைது செய்தனர்.

இதேபோல் திருச்சிற்றம்பலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் சகாபு தலைமையில் மறியலில் ஈடுபட்ட 20 பேரும், கண்டமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலமுருகன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 10 பேரும், கெடிலத்தில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் ஏழுமலை தலைமையில் மறியலில் ஈடுபட்ட 17 பேரும், உளுந்தூர்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ஆனந்தன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 45 பேரும், மேல்ஒலக்கூரில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி மாவட்ட தலைவர் சுசீலா தலைமையில் மறியலில் ஈபட்ட 23 பேரும், செஞ்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் செல்வராஜ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 21 பேரும், கண்டமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் குப்புசாமி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 15 பேரும், திருக்கோவிலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் வேல்மாறன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 37 பேரும், வளத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் உதயபெருமாள் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 20 பேரும், சங்கராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் சவுரிராஜன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 25 பேரும், கண்டாச்சிபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் சுப்பிரமணி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 20 பேரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் கள்ளக்குறிச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் மணி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 55 பேரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் அப்பாவு தலைமையில் மறியலில் ஈடுபட்ட 25 பேரும், சின்னசேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 34 பேரும், திண்டிவனத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் இன்பஒளி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 16 பேரும், சங்கராபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் சக்திகுமார் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 36 பேரும், வெள்ளிமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் சின்னசாமி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 20 பேரும், திருவெண்ணெய்நல்லூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் முருகன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 25 பேரும் கைது செய்யப்பட்டனர்.

ஆக மொத்தத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 22 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் 637 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

அரகண்டநல்லூரில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் வாசிம்ராஜா தலைமையிலும், தி.மு.க.ஒன்றிய செயலாளர் பிரபு, நகர தி.மு.க.செயலாளர் சுந்தரமூர்த்தி, தி.மு.க. சிறுபான்மை பிரிவு மாவட்ட நிர்வாகி எம்.எஸ்.கே.அக்பர், நகர காங்கிரஸ் தலைவர் சாதுல்லாகான், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி மாவட்ட செயலாளர் ஏ.வி. சரவணன் ஆகியோர் முன்னிலையிலும் அனைத்து கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட பொது செயலாளர்கள் பால.பத்மநாபன், தாயுமானவர், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொது செயலாளர் தஸ்தகீர், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் ரியாசுதீன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சேகர், தமிழ்மாநில காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சுபாஷ், வட்டார தலைவர்கள் தனசேகர், பாவாடை, தி.மு.க.ஒன்றிய அவைத்ததலைவர் முருகதாஸ், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ராஜ்மோகன் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் திருக்கோவிலூர் 5முனை சந்திப்பிலும் அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதுதவிர ரிஷிவந்தியத்தில் காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் பன்னீர்செல்வம் தலைமையிலும், கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் இளங்கோவன் தலைமையிலும், திருச்சிற்றம்பலத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் முரளி தலைமையிலும், அவலூர்பேட்டையில் காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் ராஜவேலாயுதம் தலைமையிலும், திருக்கோவிலூர் தாங்கல் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத்தலைவர் முருகன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மேலும் செய்திகள்