நிலுவையில் உள்ள ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும், சுகாதார பணியாளர்கள் மனு

நிலுவையில் உள்ள ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம், சுகாதார பணியாளர்கள் மனு அளித்தனர்.

Update: 2018-09-10 22:30 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். அதன்படி தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. சுகாதார பணியாளர்(ஆஷா) சங்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவர் ஆரி மற்றும் சுகாதார பணியாளர்கள் நிலுவையில் உள்ள ஊக்கத்தொகையை உடனே வழங்கக்கோரி மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–

நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் கீழ் 500–க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் 19 வகையான பணிகளை மேற்கொண்டு கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் இதுவரை அரசு நிர்ணயம் செய்த ஊக்கத்தொகையை குறிப்பிட்ட காலத்தில் சுகாதார பணியாளர்களுக்கு வழங்குவது இல்லை. இதுகுறித்து பல்வேறு மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளது. சுகாதார பணியாளர்கள் ஒவ்வொருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிகின்றனர். ஊக்கத்தொகை வழங்கப்படாததால், அவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதம் 1–ந் தேதி சென்னை சுகாதாரத்துறை இயக்குனர் நீலகிரி மாவட்டத்துக்கு ரூ.67 லட்சத்து 18 ஆயிரம் நிதி ஒதுக்கினார். அப்படி இருந்தும் இதுவரை சுகாதார பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. இதனால் ஊட்டி அலுவலக கூட்டத்துக்கு செல்ல முடியாமல் கடன் வாங்கி பஸ்களில் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே நிலுவையில் உள்ள 10 மாத ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும். மேலும் சிறப்பு சலுகையின் கீழ் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கவும், மத்திய அரசு அறிவித்த பாரத பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு வீடுகள் தோறும் கணக்கு எடுத்த சுகாதார பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள தொகையை( ஒரு வீட்டிற்கு ரூ.15 வீதம்) வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி கொடுத்த மனுவில், காந்தலில் ஆடு, மாடுகளை அறுக்கும் வதைக்கூடம் அருகே பொது நடைபாதை மற்றும் எங்களுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டி உள்ளனர். இதனால் அந்த பகுதி மக்கள் நடைபாதையில் நடந்து செல்ல முடியாமல், எங்களது வீட்டு வழியாக சென்று வருகின்றனர். எனவே நடைபாதையில் கட்டப்பட்டு உள்ள கட்டிடத்தை அகற்றி, பொதுமக்கள் நடந்து செல்ல வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்