சிறுமி பாலியல் பலாத்காரம் 60 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை

12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய 60 வயது முதியவருக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

Update: 2018-09-10 22:00 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த வரதாபுரம் இருளர் காலனியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 60). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்த 5–ம் வகுப்பு வரை படித்த 12 வயதான ஒரு சிறுமியும் ஆடு மேய்த்து வந்தார். இவர் தாய்–தந்தையை இழந்தவர். ஆடு மேய்க்கும் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து ராஜ்குமார், ஆசைவார்த்தை கூறி அச்சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த சிறுமியின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

ஆயுள் தண்டனை

இதுபற்றி திருவள்ளூரில் உள்ள தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கு விசாரணை திருவள்ளூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பரணிதரன், குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து ராஜ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டது 12 வயது சிறுமி என்பதால் கூடுதலாக 7 ஆண்டு சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.

 இதைத்தொடர்ந்து திருவள்ளூர் தாலுகா போலீசார் ராஜ்குமாரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக தனலட்சுமி வாதாடினார். 

மேலும் செய்திகள்