பெட்ரோல்– டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம், 246 பேர் கைது

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மதுரையில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

Update: 2018-09-10 23:00 GMT

மதுரை,

மதுரையில் எதிர்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை. நகரில் 80 சதவீத கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. ஒரு சில இடங்களில் மட்டும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடின. ஆட்டோக்கள் மட்டும் குறைந்த அளவு இயக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியல் நடத்தப்பட்டது. பெட்ரோல்–டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஸ்காட் ரோடு பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டத்திற்காக நேற்று காலை கூடினார்கள்.

அப்போது கம்யூனிஸ்டு கட்சியினர் மொபட் வண்டியை மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு வந்து பெட்ரோல்–டீசல் விலை உயர்வை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் விஜயராகவன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் லாசர், நன்மாறன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நந்தாசிங் மற்றும் பெண்கள் உள்பட பலர் திடீரென்று அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

உடனே அங்கிருந்த போலீஸ் உதவி கமி‌ஷனர் வெற்றிச்செல்வன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 246 பேரை கைது செய்தனர். மேலும் போராட்டத்திற்கு அனுமதி பெறாமல் மொபட்டை மாட்டு வண்டியில் ஏற்றி வந்ததால், அதனை போலீசார் பறிமுதல் செய்ய முயன்றனர். இதற்கு மொபட் மற்றும் மாட்டுவண்டியின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை மீறி போலீசார் மாட்டுவண்டியுடன் மொபட்டை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தக அணி சார்பில் பெட்ரோல்–டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் சைக்கிள் ரிக்ஷாவில் மொபட் வண்டியை ஏற்றியும், 2 பேர் காளை வேடத்தில் ஆட்டோவை கட்டி இழுத்து வந்தனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பொதுச்செயலாளர் ஜியாவுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 30–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பெட்ரோல்–டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

கம்யூனிஸ்டு கட்சியினர் பெட்ரோல்–டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன முறையில் மாட்டு வண்டியில் மொபட் வண்டியை ஏற்றி வந்தனர். அப்போது போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் கலந்து கொண்டதாக மாட்டுவண்டியுடன் மொபட்டை பறிமுதல் செய்தனர். அப்போது மாட்டு வண்டியின் உரிமையாளர் தனது மாட்டிற்கு வைக்கோல் போட வேண்டும் என்று போலீசாரிடம் கூறினார். அப்போது போலீஸ்காரர் ஒருவர் வைக்கோல் ஒரு கிலோ அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த பணத்தில் சிலருக்கு மதிய உணவு வாங்கி கொடுத்து விடுவோம் என்று சிரித்து கொண்டே தெரிவித்தார். உடனே உரிமையாளர் கண்டிப்பாக எங்களுக்கு உணவு கொடுப்பது போன்று, மாட்டிற்கும் வைக்கோல் வாங்கி கொடுக்க வேண்டும் என்று கூறினார். அதை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் வைக்கோல் வாங்கி வந்து மாட்டிற்கு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்