கோவில்பட்டியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

கோவில்பட்டியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் ரெயில்வே உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரெயில்கள் தாமதமாக சென்றன.

Update: 2018-09-10 22:00 GMT
கோவில்பட்டி, 


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் வர பெரிதும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் திடீரென்று வானில் கருமேகங்கள் திரண்டன. சிறிது நேரத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இடி-மின்னலுடன் மாலை 5 மணி வரையிலும் நீடித்த இந்த மழையால் சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாறுகால், ஓடைகளில் மழைநீர் வழிந்தோட இயலாதவாறு ஆங்காங்கே பிளாஸ்டிக் குப்பைகள் அடைத்து கிடந்ததால், சாலையில் சுமார் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது.

கோவில்பட்டி புதுரோடு, மெயின் ரோடு, மாதாங்கோவில் ரோடு, மந்திதோப்பு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இளையரசனேந்தல் ரோடு ரெயில்வே சுரங்கப்பாதையில் சுமார் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியதால், அந்த வழியாக வாகனங்கள் செல்ல சிரமப்பட்டன.

சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மாலை 3.15 மணிக்கு கோவில்பட்டி அருகே வேலாயுதபுரம் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தின் மேல் செல்லும் உயர் அழுத்த மின்கம்பி திடீரென்று அறுந்து கீழே விழுந்தது. இதனால் அந்த வழியாக மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மின்சார ரெயில்களை இயக்க முடியவில்லை.
இதுகுறித்து கோவில்பட்டி ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே ரெயில்வே மெக்கானிக்கல் பிரிவு ஊழியர்கள் விரைந்து சென்று, அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, நெல்லையில் இருந்து மும்பை தாதர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் மாலை 3.45 மணிக்கு கோவில்பட்டி ரெயில் நிலையத்துக்கு வந்தது. தொடர்ந்து நெல்லையில் இருந்து ஜம்முதாவி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் மாலை 5 மணி அளவில் கோவில்பட்டி ரெயில் நிலையம் வந்தது.
அந்த ரெயில்கள் மின்சார ரெயில் என்ஜின்கள் மூலம் இயக்கப்படுவதால், அவற்றை கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைத்தனர்.

முன்னதாக திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட்டதால், அந்த ரெயில் வழக்கம்போல் கோவில்பட்டியில் இருந்து புறப்பட்டு சென்றது. அறுந்து கிடந்த மின் கம்பியை ஊழியர்கள் சரி செய்த பின்னர் அந்த வழியாக மின்சார ரெயில் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடத்தினர். பின்னர் ஜம்முதாவி எக்ஸ்பிரஸ், மும்பை தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அடுத்தடுத்து புறப்பட்டு சென்றன. ரெயில்கள் தாமதமாக சென்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

மேலும், சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சாத்தூர் ரெயில் நிலையத்திலும், கோவை-நாகர்கோவில் ரெயில் நல்லி ரெயில் நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டன. சீரமைப்பு பணிக்குப்பின் அவை தாமதமாக புறப்பட்டு சென்றன. 

மேலும் செய்திகள்