ராசிபுரம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து கிளினர் பலி மாணவ, மாணவிகள் 3 பேர் காயம்

ராசிபுரம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் கிளினர் பலியானார். மாணவ, மாணவிகள் 3 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2018-09-10 22:45 GMT
ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள சேந்தமங்கலம் பிரிவு ரோட்டில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கு சொந்தமான வேன் நேற்று காலையில் சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, நரசிம்மன்புதூர் போன்ற பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது.

வேனில் 12 மாணவர்கள், 10 மாணவிகள் என 22 பேர் இருந்தனர். வேனை சேந்தமங்கலம் ஓட்டன்குளத்தை சேர்ந்த பெரியசாமி (வயது 42) என்பவர் ஓட்டிச் சென்றார்.

ராசிபுரம் அருகேயுள்ள அணைப்பாளையத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் (28) என்பவர் கிளினர் ஆக இருந்தார். அவர்கள் சென்ற வேன் ராசிபுரம்-பேளுக்குறிச்சி சாலையில் வெள்ளக்கணவாய் என்ற இடத்தில் உள்ள வளைவில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி கவிழ்ந்தது. அப்போது வேனில் இருந்த மாணவ, மாணவிகள் அலறினார்கள். விபத்து நடந்த இடத்தில் வேனின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. மேலும் மாணவ, மாணவிகள் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டில்கள், தின்பண்டங்கள் சிதறிக் கிடந்தன.

இந்த விபத்தில் கிளினர் சதீஸ்குமார் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

வேனில் பயணம் செய்த பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவி துத்திக்குளத்தைச் சேர்ந்த ஹேமரஞ்சினி (12), 11-ம் வகுப்பு மாணவி காளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஹர்சினி (15), மாணவன் மகரிஷி (4) ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். மாணவன் மகரிஷி பேளுக்குறிச்சி அருகேயுள்ள நரசிம்மன்புதூரைச் சேர்ந்தவன். மற்றவர்கள் காயம் இன்றி தப்பித்தனர்.

விபத்து பற்றி கேள்விப்பட்டதும் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்து மாணவ, மாணவிகளை மீட்டனர். காயம் இன்றி தப்பித்த மாணவ, மாணவிகளை பள்ளியின் நிர்வாகத்தினர், மாற்று பஸ்சில் ஏற்றிக்கொண்டு பள்ளியில் கொண்டு வந்து விட்டனர். இதுபற்றி பேளுக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான வேனின் கிளினர் சதீஸ்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த் பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்