டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.98 ஆயிரம் கொள்ளை

கயத்தாறு அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.98 ஆயிரத்தை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-09-10 22:00 GMT
கயத்தாறு, 


தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அய்யனாரூத்து ஊருக்கு மேற்கு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மேற்பார்வையாளராக கயத்தாறு அருகே ஆத்திகுளத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (வயது 40), விற்பனையாளராக குமாரகிரியைச் சேர்ந்த சுப்புராஜ் (35) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவில் வேலை முடிந்ததும், வழக்கம்போல் டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு, தங்களது வீடுகளுக்கு புறப்பட்டனர். அப்போது டாஸ்மாக் கடையில் வசூலான ரூ.98 ஆயிரத்து 470-யை மறுநாள் காலையில் வங்கியில் செலுத்துவதற்காக, இசக்கிமுத்து எடுத்து சென்றார்.

இசக்கிமுத்து மொபட்டிலும், சுப்புராஜ் மோட்டார் சைக்கிளிலும் அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் 2 பேரும் அய்யனாரூத்து காற்றாலை பண்ணை அருகில் சென்றபோது, அங்கு காட்டு பகுதியில் மறைத்து இருந்த 3 மர்மநபர்கள் திடீரென்று அரிவாளைக் காண்பித்து 2 பேரையும் வழிமறித்தனர். பின்னர் மர்மநபர்கள் 3 பேரும் அரிவாளை திருப்பி வைத்து இசக்கிமுத்து, சுப்புராஜ் ஆகிய 2 பேரையும் சரமாரியாக தாக்கினர்.
இசக்கிமுத்துவிடம் இருந்த ரூ.98 ஆயிரத்து 470-யை மர்மநபர்கள் கொள்ளை அடித்து விட்டு, மொபட், மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றையும் மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இதனால் இசக்கிமுத்து, சுப்புராஜ் ஆகிய 2 பேரும் இரவில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்கள் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார். காயம் அடைந்த இசக்கிமுத்து, சுப்புராஜ் ஆகிய 2 பேரும் கயத்தாறு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்