பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு கர்நாடகத்தில் முழுஅடைப்புக்கு ஆதரவு பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் பாதிப்பு

கர்நாடகத்தில் முழு அடைப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Update: 2018-09-10 23:43 GMT
பெங்களூரு,

அகில இந்திய காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

23 ஆயிரம் அரசு பஸ்கள்

அதற்கு கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் உள்பட பல்வேறு கன்னட அமைப்புகள், போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்து இருந்தன.

அதன்படி கர்நாடகத்தில் நேற்று அரசு பஸ்கள் ஓடவில்லை. மாநிலம் முழுவதும் சுமார் 23 ஆயிரம் அரசு பஸ்கள் தனது சேைவயை நிறுத்திவிட்டன. இதில் பெங்களூருவில் மட்டும் சுமார் 7 ஆயிரம் பஸ்கள் அடங்கும்.

ஊழியர்களுக்கு விடுமுறை

பெங்களூருவை பொறுத்தவரையில் பி.எம்.டி.சி. பஸ்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆட்டோக்களும் முழு அடைப்பில் கலந்துகொண்டதால், அவையும் சாலையில் இறங்கவில்லை. பெங்களூரு நகர சாலைகளில் தனியார் கார்களும், இருசக்கர வாகனங்களும் ஓடியதை மட்டுமே பார்க்க முடிந்தது.

அதே நேரத்தில் வாடகை கார்கள், தனியார் வாடகை கார் நிறுவனங்களின் கார்களும் ஓடவில்லை. தனியார் பஸ்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஓடின. தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. அந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

சினிமா காட்சிகள் நிறுத்தப்பட்டது

மென்பொருள் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கியது. அந்த ஊழியர்கள் வீடுகளில் இருந்தபடி பணியாற்றினர். பெரிய வணிக வளாகங்கள் மூடப்பட்டு இருந்தன. அவற்றின் முன் பகுதியில் வலை விரிக்கப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்டு இருந்தது.

பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. நகரின் உள்பகுதிகளில் சிறிய கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. அங்கு முக்கியமாக பால் தடையின்றி கிடைத்தது. திரையரங்குகளில் சினிமா காட்சிகள் திரையிடுவது நிறுத்தப்பட்டது.

வெறிச்சோடி காணப்பட்டது

பெங்களூரு கெம்பேகவுடா ரோடு, எம்.ஜி.ரோடு, ஜே.சி.ரோடு, கப்பன் ரோடு, கஸ்தூரிபா ரோடு, ஓசூர் ரோடு, மைசூரு ரோடு, லால்பாக் ரோடு, நிருபதுங்கா ரோடு, வாட்டாள் நாகராஜ் ரோடு போன்ற முக்கியமான ரோடுகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், அந்த சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பொதுவாக வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையில் பெங்களூருவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். குறிப்பாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் ஊர்ந்து செல்லும். ஆனால் நேற்று முழு அடைப்பையொட்டி சாலைகள் வெறிச்சோடி இருந்தன.

மருத்துவமனைகள்

போலீஸ் வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தன. நகரின் முக்கியமான சந்திப்புகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். மருந்து கடைகள், மருத்துவமனைகள் எப்போதும் போல் திறக்கப்பட்டு இருந்தன. ஆம்புலன்ஸ் வாகனங்கள் தடையின்றி இயங்கின.

அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டு இருந்தன. ஆனால் ஊழியர்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக குறைவாக இருந்தது. பெங்களூருவில் 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும், மெஜஸ்டிக் கே.எஸ்.ஆர்.டி.சி. மற்றும் பி.எம்.டி.சி. பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

மெட்ரோ ரெயில்கள் இயங்கின

அதே நேரத்தில் மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் இயங்கின. அதில் பயணிகளின் எண்ணிக்கை ஓரளவுக்குத்தான் இருந்தது.

அதேபோல் மாநிலத்தின் பிற பகுதிகளில் அதாவது மங்களூரு, உப்பள்ளி-தார்வார், மைசூரு, பெலகாவி, கலபுரகி, பல்லாரி ஆகிய நகரங்களிலும் அரசு பஸ்கள் ஓடவில்லை. கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன.

விசாரணை ஒத்திவைப்பு

எப்போதும் பரபரப்பாக இருக்கும் கர்நாடகத்தின் அதிகார மையமான விதான சவுதா வெறிச்சோடி காணப்பட்டது. ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. கர்நாடக ஐகோர்ட்டு உள்பட பிற கோர்ட்டுகளும் எப்போதும் போல செயல்பட்டன.

வழக்கு விசாரணையின்போது சம்பந்தப்பட்ட வக்கீல்கள் ஆஜராயினர். ஆனால் சாட்சிகள் மற்றும் வழக்கிற்கு சம்பந்தப்பட்டவர்கள் ஆஜர் ஆகாததால், பெரும்பாலான வழக்குகளின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டன.

காலாண்டு தேர்வு ஒத்திவைப்பு

அரசு மற்றும் தனியார் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் நேற்று நடைபெற இருந்த காலாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஒரு கே.எஸ்.ஆர்.டி.சி.(அரசு) பஸ், உடுப்பி மாவட்டத்தில் 2 அரசு பஸ்கள் என மொத்தம் 3 அரசு பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது. இதில் அந்த பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன. உடுப்பியில் மூடப்பட்டு இருந்த கடைகளை திறக்கும்படி பா.ஜனதாவினர் அந்த கடைகளின் உரிமையாளர்களை வற்புறுத்தினர்.

இதற்கு அங்கு இருந்த காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு இருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மைசூரு உள்ளிட்ட சில பகுதிகளில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சாலையில் டயர்களை போட்டு தீயிட்டு எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மாட்டு வண்டி ஊர்வலம்

ஒட்டுமொத்தத்தில் கர்நாடகத்தில் முழு அடைப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு மேல் பஸ்கள் ஓட ஆரம்பித்தன. கே.எஸ்.ஆர்.டி.சி. மற்றும் பி.எம்.டி.சி. பஸ்கள் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து தனது சேவையை தொடங்கின. ஆயினும் பயணிகளின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந் தது.

கர்நாடக காங்கிரஸ் சார்பில் மாட்டு வண்டி ஊர்வலம் பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் இருந்து புறப்பட்டு அனந்தராவ் சர்க்கிள் வரை நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியினர் அதிகளவில் கலந்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல் பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

கோஷங்களை எழுப்பினர்

இதில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ‘‘பெட்ேரால்-டீசல் விலையை குறைக்க வேண்டும்’’ என்று வலியுறுத்்தினர். அதேபோல் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் ஊர்வலம் நடத்தி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்