பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு விண்ணப்ப வினியோகம்

பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு கோவை மருத்துவக்கல்லூரியில் விண்ணப்ப வினியோகம் தொடங்கியது.

Update: 2018-09-11 22:00 GMT
கோவை,


கோவை அவினாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம் உள்பட 20 பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த படிப்புகளுக்கு 2018-19-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதனை மருத்துவக்கல்லூரியின் துணை முதல்வர் காளிதாஸ் மாணவ- மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

இந்த விண்ணப்ப வினியோகம் வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு கட்டணமாக ரூ.400 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்ப கட்டணத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் செயலாளர், தேர்வுக்குழு கீழ்ப்பாக்கம், சென்னை என்ற பெயரில் வரைவோலையாக எடுக்க வேண்டும். பின்னர் அதனை மருத்துவக்கல்லூரியில் வழங்கி விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பை பெறலாம்.

சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் தனியாக ரூ.100-க்கு கேட்பு வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் தகுந்த சான்றிதழை காண்பித்து விண்ணப்பத்தை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக பெற்று செல்லலாம். இதுதவிர www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பின்னர் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், தேர்வுக்குழு, எண் 162, ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு வருகிற 20-ந் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்