அந்தேரியில் 7 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ தீயணைப்பு படை வீரர் காயம்

அந்தேரியில் 7 மாடி வணிக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயணைப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.

Update: 2018-09-12 00:00 GMT
மும்பை, 

அந்தேரியில் 7 மாடி வணிக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயணைப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.

தீ விபத்து

மும்பை அந்தேரி மதுர் தொழிற்பேட்டையில் 7 மாடிகள் கொண்ட வணிக கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் அலுவலகங்களும், ஒரு சில கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில், நேற்று காலை அந்த கட்டிடத்தின் 2-வது மாடியில் திடீரென தீப்பிடித்தது. அங்கிருந்து குபுகுபுவென கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அலுவலகங்கள் மற்றும் கடைகளில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பதறி அடித்து கொண்டு கீேழ இறங்கினார்கள். தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு படை வீரர் காயம்

இதைத்தொடர்ந்து 8 வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீயணைப்பு பணியின் போது, தீயணைப்பு வீரர் ஒருவருக்கு கையில் தீ்க்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக கூப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த தீ விபத்தில் 2-வது மாடியில் உள்ள ஒரு மருந்து கடையில் உள்ள மரப்பொருட்கள், எலக்ட்ரிக் வயரிங் உள்ளிட்டவை எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக அலுவலகங்கள் மற்றும் கடைகளில் இருந்தவர்கள் காயமின்றி தப்பினார்கள்.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்