பிரணாப் முகர்ஜிக்கு கருப்பு கொடி காட்டிய வழக்கு: வைகோ உள்பட 83 பேர் விடுதலை தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு

பிரணாப் முகர்ஜிக்கு கருப்பு கொடி காட்டிய வழக்கில் வைகோ உள்பட 83 பேரை விடுதலை செய்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

Update: 2018-09-11 21:30 GMT
தூத்துக்குடி, 

பிரணாப் முகர்ஜிக்கு கருப்பு கொடி காட்டிய வழக்கில் வைகோ உள்பட 83 பேரை விடுதலை செய்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

கருப்பு கொடி காட்டிய வழக்கு

தூத்துக்குடியில் புதிதாக அனல் மின்நிலையம் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 28-2-2009 அன்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அப்போதைய மத்திய வெளியுறவுத்துறை மற்றும் நிதித்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி தூத்துக்குடிக்கு வந்தார். அவரை கண்டித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தினர்.

இதுதொடர்பாக தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார், வைகோ உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது.

வைகோ விடுதலை

இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி பிஸ்மிதா, இந்த வழக்கில் தொடர்புடைய வைகோ உள்பட 83 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார். வைகோ தரப்பில் வக்கீல் செங்குட்டுவன் ஆஜராகி வாதாடினார். வைகோ விடுதலை செய்யப்பட்டதை அறிந்த ம.தி.மு.க.வினர் கோர்ட்டு எதிரே பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

மேலும் செய்திகள்