குளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில் இடித்து அகற்றம்

சிதம்பரம் அருகே குளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கோவிலை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

Update: 2018-09-11 21:42 GMT
சிதம்பரம், 

சிதம்பரம் அருகே பள்ளிப்படை கிராமத்தில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த, உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று காலை சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் தாசில்தார் தமிழ்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கம் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அந்த குளத்தின் உள்ளே விநாயகர் கோவில் ஒன்றை தனிநபர் ஒருவர் கட்டி, அதை சுற்றிலும் மதில் சுவரையும் கட்டி வைத்து இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து பொக்லைன் எந்திரம் அங்கு வரவழைக்கப்பட்டு, அதன் மூலம் கோவில் மற்றும் மதில் சுவரை வருவாய்த்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர். இந்த சம்பவத்தின் போது அங்கு அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில், சிதம்பரம் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்