ரூ.80 கோடி மதிப்பில் சிலை கடத்தல் வழக்கு: சினிமா இயக்குனர் உள்பட 12 பேர், கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்

ரூ.80 கோடி மதிப்பிலான சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக சினிமா இயக்குனர் வி.சேகர் உள்பட 12 பேர் நேற்று கும்பகோணம் கோர்ட்டில் ஆஜராயினர். இந்த வழக்கின் விசாரணை வருகிற 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2018-09-11 22:45 GMT
கும்பகோணம்,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சவுந்தரியபுரத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில், பையூரில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சுங்குவார் சத்திரம் அருகே ராமானுஜபுரத்தில் உள்ள மணிகண்டேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் இருந்து கடந்த 2015-ம் ஆண்டு சிவன்-பார்வதி சிலை, ஆதிகேசவ பெருமாள் சிலை, 2 பூதேவி சிலைகள், 2 ஸ்ரீதேவி சிலைகள், பிரசன்ன வெங்கடேச பெருமாள் சிலை, சக்கரத்தாழ்வார் சிலை ஆகிய 8 சிலைகள் கடத்தப்பட்டன.

இவற்றின் மதிப்பு ரூ.80 கோடி ஆகும். இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிலை கடத்தலில் 15 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய தனலிங்கம் என்பவரை கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 14-ந் தேதி சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் மற்றும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 14 பேரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை கும்பகோணம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிலை கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த சினிமா இயக்குனர் வி.சேகர், மாரீஸ்வரன், சண்முகம், ஜாய்சன் சாந்தகுமார், தமீம்பாட்ஷா, சபரிநாதன், தனலிங்கம், கோகுல்பிரகாஷ், பார்த்திபன், சிறையில் உள்ள ஜெயக்குமார், விஜயராகவன், முஸ்தபா ஆகிய 12 பேர் நேற்று கும்பகோணம் கோர்ட்டில் விசாரணைக்காக ஆஜராகினர்.

வழக்கில் தொடர்புடைய ராஜசேகர், சண்முகநாதன், சுப்பிரமணியன் ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அய்யப்பன்பிள்ளை, வருகிற 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்