சிறுமியை கர்ப்பமாக்கிய லாரி டிரைவர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது

செய்யாறு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய லாரி டிரைவர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-09-11 23:00 GMT
செய்யாறு,

லாரி டிரைவர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுகா பில்லாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம் (வயது 35), லாரி டிரைவர். இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது உறவினர் வீட்டில் தனிமையில் இருந்த 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் பயந்து போன சிறுமி நடந்தவற்றை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட விநாயகம் தொடர்ந்து பலமுறை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார்.

இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் மகளிடம் கேட்டபோது அவர் நடந்தவற்றை கூறினார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் விநாயகத்திடம் சென்று தனது மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டனர். அதற்கு விநாயகம், திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

இதையடுத்து செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விநாயகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்