இ-சேவை மையம் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இ-சேவை மையம் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-11 22:13 GMT
சிவகங்கை, 


கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இப்பணிக்காக விண்ணப்பதாரர்கள் டி.என்.பி.எஸ்.சி. மையத்திற்கு செல்ல வேண்டிய தேவையில்லை. அவர்கள் தங்களது சான்றிதழ்களை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் இ-சேவை மையம் மூலமாக சரிபார்த்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, தற்போது அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது.

மேலும் அத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்காக ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யும் பணியானது கடந்த 30-ந்தேதி முதல் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்கள் மூலமாக நடைபெற்று வருகிறது. எனவே தேர்ச்சி பெற்றவர்கள் இ-சேவை மையங்கள் வாயிலாக தங்களது சான்றிதழை பதிவேற்றம் செய்து சரிபார்க்கலாம்.
தற்போது வரை 170 விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்துள்ளனர். எனவே குரூப்-4 தேர்வில் தேர்ச்சிபெற்ற விண்ணப்ப தாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை வருகிற 18-ந்தேதிக்குள் அரசு இ-சேவை மையங்களில் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து சரிபார்ப்பு பணியை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்