கடல் முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி மீனவர்கள் திடீர் சாலை மறியல்

கடல் முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி புதுச்சேரியில் மீனவர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-11 22:30 GMT
புதுச்சேரி,

புதுவை தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் மணல் திட்டுகள் மீண்டும் உருவாகியுள்ளன. இதன் காரணமாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் விசைப் படகுகள் இந்த மணல் திட்டுகளில் சிக்கி சேதமடைந்து வருகின்றன.

எனவே மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் நேற்று முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி மரப்பாலம் சந்திப்பில் மீனவர்கள் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்