மும்பை-கோவா நெடுஞ்சாலையில் கார்- பஸ் மோதி விபத்து கைக்குழந்தை உள்பட 6 பேர் உடல் நசுங்கி சாவு

மும்பை- கோவா நெடுஞ்சாலையில் காரும், பஸ்சும் நேருக்கு நேர் ேமாதிய விபத்தில் கைக்குழந்தை உள்பட 6 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.

Update: 2018-09-11 22:45 GMT
மும்பை, 

மும்பை- கோவா நெடுஞ்சாலையில் காரும், பஸ்சும் நேருக்கு நேர் ேமாதிய விபத்தில் கைக்குழந்தை உள்பட 6 பேர் உடல் நசுங்கி பலியாகினர். விநாயகர் சதுர்த்தி கொண்டாட சொந்த ஊருக்கு சென்றபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி

மும்பை தகிசரில் இருந்து 2 குடும்பத்தை சேர்ந்தவர்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊரான ரத்னகிரி செல்ல நேற்று ஒரு காரில் புறப்பட்டனர். மும்பை-கோவா நெடுஞ்சாலையில் காலை 11.15 மணி அளவில் லாஞ்சா தாலுகா வாகட் கிராமம் அருகே இவர்கள் சென்ற கார் வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிரே ரத்னகிரியில் இருந்து போரிவிலி நோக்கி சென்ற தனியார் பஸ்சும், காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

6 பேர் பலி

இந்த கோர விபத்தில் 6 மாத கைக்குழந்தை உள்பட 6 பேர் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான 6 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்