காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பா.ஜனதாவில் சேர மாட்டார்கள் பரமேஸ்வர் பேட்டி

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பா.ஜனதாவில் சேர மாட்டார்கள் என்று பரமேஸ்வர் கூறினார்.

Update: 2018-09-11 23:00 GMT
பெங்களூரு, 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பா.ஜனதாவில் சேர மாட்டார்கள் என்று பரமேஸ்வர் கூறினார்.

பா.ஜனதா முயற்சி

துணை முதல்-மந்திரி பரமேஸ்வரை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி நேற்று பெங்களூருவில் சந்தித்து தனது அதிருப்தி குறித்து விவாதித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் சதீஸ் ஜார்கிகோளியுடன் பேசினேன். பா.ஜனதாவில் சேருவதாக வெளியான தகவல் தவறானது என்று அவர் என்னிடம் கூறினார். ரமேஷ் ஜார்கிகோளியும் இதே கருத்தை தான் சொன்னார். கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்கிறது.

பா.ஜனதாவில் சேர மாட்டார்கள்

அதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் உள்ளதாக அந்த கட்சியினர் தவறான தகவலை பரப்புகிறார்கள். அதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர மாட்டார்கள். இதற்கு யாரும் முக்கியத்துவம் அளிக்க தேவை இல்லை. இந்த காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் இருக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

பிரதமரை நேரில் சந்தித்து குடகு மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவி வழங்குமாறு கேட்டோம். மத்திய குழுவை அனுப்புவதாக பிரதமர் உறுதியளித்தார். மேலும் வட கர்நாடகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது. அங்கும் மத்திய குழு மூலம் ஆய்வு நடத்துமாறு கேட்டுள்ளோம்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

மேலும் செய்திகள்