6 ஆண்டுகளாக பூட்டி கிடந்த கட்டளை சிவன் கோவில் திறப்பு

“தினத்தந்தி” செய்தி எதிரொலியாக கடந்த 6 ஆண்டுகளாக பூட்டி கிடந்த கட்டளை சிவன் கோவில் திறக்கப்பட்டது.

Update: 2018-09-25 22:45 GMT
கிருஷ்ணராயபுரம்,

கரூர் மாவட்டம் ரெங்கநாதபுரம் ஊராட்சி கட்டளையில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் மூலவராக கைலாசநாதரும், தனி சன்னதியில் காமாட்சி அம்மனும் உள்ளனர். மேலும் வள்ளி, தெய்வானை, வேல், மயில் ஆகியவற்றுடன் ஆறு முகங்களை கொண்ட முருகன் என ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிலையும், விநாயகர், பைரவர், தட்சிணாமூர்த்தி, நந்தி, நவக்கிரகங்கள் என தனி தனி தெய்வங்களும் உள்ளது. தினந்தோறும் ஒரு கால பூஜையும், பிரதோஷ நாட்களில் நந்திக்கு சிறப்பு அபிஷேகமும், சிவராத்திரி நாட்களில் சிறப்பு வழிபாடும் நடைபெற்ற இக்கோவிலுக்கு கிராம மக்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் பல பகுதியிலிருந்தும் பக்தர்கள் வந்து சிவனை வழிபட்டு சென்றனர்.

கோவிலின் பரம்பரை அறங்காவலராக ஆதி மூர்த்தி குருக்கள் என்பவர் இருந்து பூஜைகளை நடத்தி வந்த நிலையில், அவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பின் அவரின் வாரிசுகள் யாரும் பூஜைகள் செய்ய வராமையால் கோவில் பூட்டியே கிடந்தது. இதனால் சிவ பக்தர்களும், கிராம மக்களும் வேதனையில் இருந்தனர். இது குறித்து “தினத்தந்தி”நாளிதழில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தியின் மூலம் கோவிலின் பழமையையும், அதன் தற்போதைய நிலையையும் அறிந்த கோவை மாவட்டத்தை சேர்ந்த அவினாசி அப்பா ஆன்மிக அறக்கட்டளை உறுப்பினர்கள் இக்கோவிலை திறந்து பூஜைகள் நடைபெற நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன்படி அவர்கள் கட்டளைக்கு வந்து கிராம மக்களின் உதவியுடன் கோவிலை திறந்து தூய்மை பணியினை மேற்கொண்டனர். பின்னர் புதிய குருக்களை நியமித்து கடந்த வளர்பிறை சனி பிரதோஷ நாளில் கைலாச நாதர், காமாட்சி அம்மன், நந்தி உள்பட கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்து வழிபாட்டை தொடங்கினர். இதனை தொடர்ந்து தற்போது பக்தர்களின் வழிபாட்டுக்காக கோவில் காலை, மாலை என இரண்டு நேரமும் திறக்கப்பட்டு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

பிரதோஷ நாட்களில் நந்திக்கும், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. இதனால் சிவபக்தர்களும், கிராம மக்களும் கோவிலுக்கு அதிக அளவில் வந்து வழிபட்டு செல்வதுடன் பூட்டி கிடந்த கோவில் குறித்து செய்தி வெளியிட்டு பூஜைகள் நடக்க உதவிய “தினத்தந்தி” நாளிதழுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்