நீச்சல் பழகிய போது பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி சாவு

சேலத்தில் நீச்சல் பழகிய போது பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

Update: 2018-10-19 21:45 GMT
சேலம், 

சேலம் மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி புஷ்பா. இவர்களுடைய 2-வது மகன் செல்வம்(வயது 7). இவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். கல் உடைக்கும் தொழிலாளியான முருகன் தனது மனைவியுடன் கேரளாவில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இதனால் அவருடைய மகன்களை பாட்டி வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் செல்வம் அதே பகுதியை சேர்ந்த 2 பேருடன் நீச்சல் பழகுவதற்காக கிணற்றுக்கு சென்றான். பின்னர் அவர்கள் செல்வத்திற்கு நீச்சல் பழகி கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது மாணவன் செல்வம் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்க அரம்பித்தான்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் செல்வத்தை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் செல்வம் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வீராணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

இதையடுத்து கிணற்று தண்ணீரில் மூழ்கி இறந்த மாணவனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்