கேரளாவில் முழு அடைப்பு எதிரொலி, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி காய்கறிகள் தேக்கம்

கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடிக்கு காய்கறிகள் தேக்கம் அடைந்தன.

Update: 2019-01-03 22:30 GMT
ஒட்டன்சத்திரம், 

தென் தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் உள்ளது. இங்கு சத்திரப்பட்டி, விருப்பாட்சி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதுதவிர வெளி மாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது.

இங்கிருந்து மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக கேரளாவுக்கு 70 சதவீத காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. கேரளாவுக்கு மட்டும் தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் 2 பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகள் அனுப்ப முடியாததால் தேக்கம் அடைந்தன.

மற்ற பகுதிகளுக்கு மட்டும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டது. கேரளாவுக்கு காய்கறிகள் அனுப்பாததால் சுமார் ரூ.2 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் காய்கறி விலையும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்