‘கெட்ட எண்ணங்களை மாற்றக்கூடிய சக்தி இசைக்கு மட்டுமே உள்ளது’ சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் இளையராஜா பேச்சு

கெட்ட எண்ணங்களை மாற்றக்கூடிய சக்தி இசைக்கு மட்டுமே உள்ளது என்று சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் இளையராஜா கூறினார்.

Update: 2019-01-23 23:34 GMT
சிதம்பரம், 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள சாஸ்திரி அரங்கில் நேற்று பல்கலைக்கழகத்தின் 90-ம் ஆண்டு தொடக்க விழா, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு 75-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் தலைமை தாங்கினார். பதிவாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். நுண்கலைப்புல முதல்வர் முத்துராமன் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து, அவர் மாணவர்கள் மத்தியில் கேக் வெட்டி பிறந்த நாள் விழாவை கொண்டாடினார்.

பின்னர் இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது:-

சாதனை எல்லை

நான் முதன் முதலில் 1994-ல் இந்த பல்கலைக்கழகத்துக்கு வந்து டாக்டர் பட்டம் பெற்றேன். சாதனை என்பது தானாக நிகழ்வது. அதற்கென்று எல்லை இல்லை. இசை தான் என்னை தேர்ந்தெடுத்து இருக்கிறது. இசையை பற்றி எனக்கு ஒரு துளிகூட தெரியாது. அதைத்தெரிந்து கொள்ள தான் தொடர்ந்து இசை அமைத்து கொண்டு இருக்கிறேன். இசை என்பது அசுத்தங்களை சுத்தமாக்கக்கூடிய மிகப்பெரிய சக்தி.

இசை மக்களை கவர்கிறது

ஒரு மனிதன் நல்ல எண்ணங்களையும், கெட்ட எண்ணங்களையும் உள்ளே வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறான். ஆனால் வெளியே நல்ல உள்ளம் கொண்டவன் போல் காட்டிக்கொள்கிறான். அதனை மாற்றக்கூடிய சக்தி இசைக்கு மட்டுமே உள்ளது. எல்லா இசைகளும் இதயத்தின் உள்ளே செல்வது இல்லை. எல்லா இசைக்கும் நாம் தலையாட்டுவதில்லை. சிறந்த இசைக்கு மட்டுமே நாம் தலையை அசைக்கின்றோம். சிறந்த இசை மக்களை கவர்கிறது.

இந்த பல்கலைக்கழகம் சார்பிலும், இசைத்துறை சார்பிலும் மிகப்பெரிய கலைநிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று துணைவேந்தர் கோரிக்கை விடுத்தார். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். எனவே விரைவில் எனது இசைக்குழுவினருடன் பெரிய அளவில் கலை நிகழ்ச்சியை நடத்துவேன்.

இவ்வாறு இளையராஜா கூறினார்.

தொடர்ந்து அவர் மாணவ-மாணவிகளின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது மாணவர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு:-

கேள்வி:- நீங்கள் இசை கல்லூரி தொடங்குவது பற்றி?

பதில்:- கல்லூரி தொடங்குவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் சொல்வேன்.

கேள்வி:- வெளிநாட்டில் இசை அமைத்த அனுபவத்தில் மறக்க முடியாத சம்பவங்கள் உள்ளதா?

பதில்:- வெளிநாடுகளில் இசையமைக்கும்போது பார்வையாளர்கள் மத்தியில் ஒரு குண்டு ஊசி சத்தம் கூட வராது. அதுபோல் பக்கத்தில் உள்ளவர்கள் மூச்சு விடும் சத்தம் கேட்கும். இசைக்கு அவ்வளவு மரியாதை கொடுப்பார்கள்.

கேள்வி:- இசை கலைஞர்கள் பிறக்கிறார்களா? உருவாக்கப்படுகிறார்களா?

பதில்:- படிக்கும் இடத்தில் எல்லாருக்கும் படிப்பு, இசை வருவதில்லை. இசை கலைஞர்கள் பிறக்கிறார்கள்.

இவ்வாறு பல்வேறு கேள்விகளுக்கு இளையராஜா பதில் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது பல்வேறு பாடல்களை பாடி மாணவர்களை மகிழ்வித்தார்.

விழாவில் பல்கலைக்கழக ஆட்சி மன்றகுழு உறுப்பினர் திருவள்ளுவன் மற்றும் பல்வேறு துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் ஆங்கிலத்துறை முதல்வர் தமிழ்தென்றல் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்