கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை அதிகாரி பேச்சு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரி கூறினார்.;
நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளை விரைந்து முடித்திட மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கஜா புயல் மறு கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு திட்ட இயக்குனர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு திட்ட இயக்குனர் ஜெகநாதன் பேசும் போது கூறியதாவது:-
புயலால் பாதிக்கப்பட்ட வீடு, தென்னை மரங்களை இழந்தவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நிவாரண உதவிகள் குறித்தும் நிவாரணம் முழுவதுமாக கிடைத்திட மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகள் விரைவில் கிடைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கி நடவு மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயலால் சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றுவதற்கு ஏதுவாக வேளாண் பொறியியல் துறை மூலம் மரங்களை அறுக்கும் எந்திரம் குறைந்த வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கஜா சீரமைப்பு திட்ட பணிகள் கூடுதல் திட்ட இயக்குனர்் பிரதீப்குமார், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புதிட்டம்) வேலுமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.