ஊஞ்சலூர் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்; கோவில் பூசாரி சாவு

ஊஞ்சலூர் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் கோவில் பூசாரி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-02-23 22:15 GMT

ஊஞ்சலூர்,

ஊஞ்சலூர் அருகே உள்ள குட்டப்பாளையத்தை சேர்ந்தவர் தினகரன் (வயது 51). இவர் கொளாநல்லியில் உள்ள கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கோவிலில் பூஜையை முடித்துவிட்டு வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

நத்தமேட்டூர் என்ற இடத்தில் சென்றபோது தினகரனின் மோட்டார்சைக்கிளும் எதிரே வந்த மற்றொரு மோட்டார்சைக்கிளும் எதிர்பாராவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் தினகரன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கொளாநல்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தினகரன் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த தினகரனுக்கு விமலாதேவி (45) என்ற மனைவியும், ஜனாநந்தினி (19) என்ற மகளும் உள்ளனர். தினகரனின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்