தென்பெண்ணையாற்றில் இருந்து மணல் கடத்தல்; மாட்டு வண்டி பறிமுதல்

தென்பெண்ணையாற்றில் இருந்து மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-02-23 22:30 GMT
பாகூர்,

பாகூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக அடிக்கடி புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசு சார்பில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மணல் கடத்தல் கும்பலை கண்காணித்து வருவாய் மற்றும் போலீசாரால் அபராதம், கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கையால் மணல் கடத்தல் ஓரளவு தடுக்கப்பட்டாலும் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருகிறது. இதை முற்றிலும் தடுக்க தொடர்ந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் திருடப்பட்டு கடத்தப்படுவதாக பாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது ஆற்றில் இருந்து மணல் அள்ளிக்கொண்டு அந்த வழியாக ஒரு மாட்டு வண்டி வந்தது. அதனை ஓட்டி வந்தவர் போலீசாரை பார்த்ததும் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதைத் தொடர்ந்து போலீசார் அந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

அது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மணல் கடத்தலில் ஈடுபட்டதாக சோரியாங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வாலிபர் வெற்றியரசனை (வயது 21) என்பவரை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்