பட்டுக்கோட்டை- திருவாரூர் அகல ரெயில் பாதையில் தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் ஆய்வு

பட்டுக்கோட்டை- திருவாரூர் அகல ரெயில்பாதையில் தென்னகரெயில்வே கூடுதல் பொது மேலாளர் ஆய்வு செய்தார்.

Update: 2019-03-09 23:00 GMT
பட்டுக்கோட்டை,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரை அகல ரெயில் பாதை அமைக்கும் பணி கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று முதலில் காரைக்குடி- பட்டுக்கோட்டை ரெயில்பாதை பணிகள் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 6 மாதங்களாக வாரத்தில் திங்கள், வியாழக்கிழமைகளில் மட்டும் பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி வரை பயணிகள் ரெயில் சேவை நடைபெற்று வருகிறது. தற்போது 75 கிலோ மீட்டர் தூரத்துக்கு பட்டுக்கோட்டை முதல் திருவாரூர் வரை அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை பட்டுக்கோட்டை- திருவாரூர் அகலரெயில் பாதையில் ரெயில் என்ஜின் வெள்ளோட்டம் மூலம் அதிகாரிகள் ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் ஏ.கே.மிஸ்ரா, திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஏ.உதயகுமார் ரெட்டி, முதன்மை பொறியாளர் இளம்பூரணம், துணை முதன்மை பொறியாளர் ஜே.சாம்சன்விஜயகுமார் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் இந்த ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய ஆய்வு அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டு வழியாக திருவாரூரில் மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது. ஆய்வின் போது தண்டவாளத்தில் அதிர்வுகள் ஏற்படுகிறதா? கோளாறுகள் ஏதாவது உள்ளதா? என அதிகாரிகள் கவனித்தனர்.

முன்னதாக பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே அதிகாரிகளை பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்க தலைவர் என்.ஜெயராமன், செயலாளர் வ.விவேகானந்தம், துணைத்தலைவர் கா.லெட்சுமிகாந்தன், பொருளாளர் பி.சுந்தரராஜுலு, உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்றனர். பட்டுக்கோட்டை- திருவாரூர் இடையே ரெயில்சேவை தொடங்கும் தினத்தை இப்பகுதி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். பட்டுக்கோட்டை- திருவாரூர் வழித்தடத்தில் வருகிற 21, 22, 23-ந் தேதிகளில் ரெயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்