ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரி மனித சங்கிலி போராட்டம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரி அண்ணா சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

Update: 2019-03-09 23:15 GMT

புதுச்சேரி,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் மற்றும் புதுச்சேரி உள்பட 7 நகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்போவதாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் அறிவித்திருந்தார்.

அதன்படி புதுச்சேரி அண்ணா சாலையில் மனித சங்கிலி போராட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு திராவிடர் விடுதலைக்கழகம் தலைவர் லோகு அய்யப்பன் தலைமை தாங்கினார். இதில் பேரறிவாளனின் சகோதரி அருள்செல்வி கலந்துகொண்டார்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பாட்டாளி மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, திராவிடர் விடுதலை கழகம், மக்கள் உரிமை கூட்டமைப்பு, கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம், தமிழர் களம் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 500–க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மனிதச்சங்கிலி அமைத்தனர்.

இந்த போராட்டம் காரணமாக அண்ணா சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

மேலும் செய்திகள்