நின்றிருந்த மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதி சிறுவன் பலி தந்தை கண்முன்னே பரிதாபம்

செய்யாறில் நின்றிருந்த மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2019-03-10 22:30 GMT
செய்யாறு, 

செய்யாறு டவுன் பழனிவேல் தெருவை சேர்ந்தவர் மஸ்தான் (வயது 26), தொழிலாளி. இவருடைய மகன் ஆசிக் (2). மஸ்தான் நேற்று முன்தினம் ஆசிக்கை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு பங்களாத் தெருவில் உள்ள சிக்கன் பக்கோடா கடைக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை கடை முன்பு நிறுத்தி விட்டு வண்டியின் மீது ஆசிக்கை உட்கார வைத்துவிட்டு கடைக்கு சென்று சிக்கன் பக்கோடா வாங்கி கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மினிலாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது.

இதை பார்த்த மஸ்தான் மகனை மீட்க ஓடி வந்தார். அதற்குள் ஆசிக் மினிலாரியின் பின்சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாசாமி வழக்குப்பதிவு செய்து மினிலாரி டிரைவர் செய்யாறு கன்னியம் நகரை சேர்ந்த அஜய் (26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தந்தை கண்முன்னே மகன் இறந்த சம்பவம் அப்பகுதியை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்