போலியோ ஒழிப்பில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது அமைச்சர் காமராஜ் தகவல்

போலியோ ஒழிப்பில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

Update: 2019-03-10 23:00 GMT
சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சுகாதாரத்துறை சார்பில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் உமா, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை துணை இயக்குனர் டாக்டர் ஸ்டான்லிமைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பொன்.வாசுகிராம், முன்னாள் மன்னார்குடி ஒன்றியக்குழு துணைத்தலைவர் தமிழ்செல்வம், தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் மனோகரன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் குமார், மன்னார்குடி நகராட்சி பொறியாளர் இளங்கோவன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மணவழகன், ரோட்டரி சங்க தலைவர் ஜெயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

போலியோ ஒழிப்பில் நாட்டிலே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் 800 சிறப்பு மையங்களும், நகர்ப் புறங்களில் 70 சிறப்பு மையங்களும் ஆக மொத்தம் 870 போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டு சுமார் 1 லட்சத்து 23 ஆயிரத்து 540 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் பொது சுகாதாரத்துறை பணியாளர்களுடன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள், மகளிர் மேம்பாட்டு திட்ட பணியாளர்கள் மற்றும் பிற துறை பணியாளர்களும் சேர்த்து மொத்தம் 3,563 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுத்து பயனடைய வேண்டும்.

அ.தி.மு.க. கூட்டணி வலுவான கூட்டணி. இவ்வாறு அவர் கூறினார். மேலும், பக்தர்களின் கோரிக்கைபடி மன்னார்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு பஸ் விட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்