கோட்டக்குப்பத்தில் வாகனங்கள் மோதல், கல்லூரி மாணவர் சாவு - 4 பேர் காயம்

கோட்டக்குப்பத்தில் நடந்த விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

Update: 2019-03-13 22:45 GMT
கோட்டக்குப்பம்,

கோட்டக்குப்பம் இந்திரா நகரை சேர்ந்தவர் வீரக்குமார். இவருடைய மனைவி மகேஸ்வரி (வயது 45). நேற்றுக் காலை 6 மணி அளவில் மகேஸ்வரி கோட்டக்குப்பம் சறுக்குபாலம் அருகே சென்று பால் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

அங்கு சாலையை கடக்க முயன்றபோது காலாப்பட்டில் இருந்து புதுச்சேரி நோக்கி வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மகேஸ்வரி மீது மோதியது. தொடர்ந்து அந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த கார் மீதும் மோதியது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்ற தனியார் மருத்துவக்கல்லூரி பஸ் மீது மோதி அப்பளம்போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் மகேஸ்வரி, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பிள்ளைச்சாவடியை சேர்ந்த சிவக்குமார் (19), தமிழ்செல்வன் (23) மற்றும் காரை ஓட்டி வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஹேமனன் ரெட்டி (21) மற்றும் காரில் வந்த இவருடைய நண்பர் கிருஷ்ணன் (25) ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஹேமனன் ரெட்டி பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்தில் பலியான ஹேமனன் ரெட்டி சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

மேலும் சாலையோரம் நின்ற தனியார் மருத்துவக்கல்லூரி பஸ்சில் அமர்ந்திருந்த ஊழியர்கள் சிலர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் வேலைபார்த்து வரும் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்