கார்-மொபட் மோதல், முன்னாள் ராணுவ வீரர், மனைவியுடன் பலி - தஞ்சை அருகே பரிதாபம்

தஞ்சை அருகே காரும், மொபட்டும் மோதிக்கொண்ட விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் மனைவியுடன் பலியானார். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2019-03-15 22:45 GMT
திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள தொண்டராயன்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது 65). முன்னாள் ராணுவ வீரர். இவரும், இவரது மனைவி மனோன்மணியும்(60) மாரநேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக நேற்று மொபட்டில் சென்றனர். வீட்டில் இருந்து புறப்பட்டு சிறிது தொலைவில் தொண்டராயன்பாடி மாதா கோவில் அருகே சென்றபோது எதிரில் ஒரு கார் வந்தது.

அந்த கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் அந்த இடத்திலேயே ஜெயராமன் பலியானார். மனோன்மணி தலையில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய கார் பூதலூர் ஒன்றிய தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானது என்று தெரிகிறது. விபத்து நடந்தவுடன் காரை ஓட்டி வந்தவர் அங்கேயே காரை நிறுத்தி விட்டு தலைமறைவாகி விட்டார்.

இந்த விபத்து குறித்து பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகால் சோழன் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை தேடி வருகிறார்.

விபத்தில் ராணுவ வீரரும், அவரது மனைவியும் பலியான சம்பவத்தால் தொண்டராயன்பாடி கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்