28 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலுடன் எடியூரப்பா நாளை டெல்லி பயணம் அமித்ஷாவை சந்தித்து இறுதி செய்கிறார்

கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதி களுக்கான வேட்பாளர் பட்டியலுடன் எடியூரப்பா நாளை (திங்கட்கிழமை) டெல்லிக்கு செல்கிறார். அங்கு அமித்ஷாவை அவர் சந்தித்து வேட்பாளர்களை இறுதி செய்கிறார்.

Update: 2019-03-16 22:12 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதி களுக்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.

முதல்கட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி, 23-ந்தேதிகளில் தலா 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் 22 தொகுதிகளில் வெற்றி பெற பா.ஜனதா இலக்கு நிர்ணயித்து உள்ளது.

இந்த நிலையில், 28 தொகுதிகளிலும் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். தற்போது எம்.பி.யாக உள்ள 15 பேருக்கு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று ஏற்கனவே பா.ஜனதா மேலிடம் தெரிவித்துள்ளது.

இதனால் மீதி உள்ள 13 தொகுதிகளில் வேட்பாளர்களாக யார்-யாரை தேர்வு செய்வது என்பது குறித்து எடியூரப்பா ஆலோசித்து வருகிறார். அந்த 13 தொகுதிகளில், பெங்களூரு தெற்கு தொகுதியில் மறைந்த மத்திய மந்திரி அனந்தகுமாரின் மனைவி தேஜஸ்வினியும், சாம்ராஜ்நகர் தொகுதியில் முன்னாள் மந்திரி சீனிவாச பிரசாத்தும், கலபுரகி தொகுதியில் உமேஷ் ஜாதவும் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. ஹாசன் தொகுதியில் முன்னாள் மந்திரி ஏ.மஞ்சு போட்டியிடுவதில் இழுபறி ஏற்பட்டு இருக்கிறது. ஏனெனில் இன்னும் அவர் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேரவில்லை. ஏ.மஞ்சு காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தால், அவர் ஹாசனில் போட்டியிடுவது உறுதியாகி விடும்.

இதுதவிர மற்ற 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், கர்நாடக பா.ஜனதாவின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷெட்டர், ஆர்.அசோக், ஈசுவரப்பா உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசார வியூகங்கள், வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. குறிப்பாக 15 எம்.பி.க்கள் மீண்டும் போட்டியிடும் தொகுதிகள் தவிர மற்ற 13 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடியூரப்பா விரிவாக ஆலோசிக்க உள்ளார்.

மேலும் அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியலும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தயார் செய்ய இருப்பதாகவும், அந்த பட்டியலை பா.ஜனதா மேலிடத்திடம் வழங்கி இறுதி செய்வது குறித்து முடிவு எடுக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், எடியூரப்பா நாளை(திங்கட்கிழமை) டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மேலிட தலைவர்களை சந்தித்து அவர் பேச உள்ளார். அப்போது 28 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து அமித்ஷாவுடன் எடியூரப்பா பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமித்ஷாவின் அனுமதி பெற்று 28 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் மண்டியா தொகுதியில் பா.ஜனதா சார்பில் வேட்பாளரை நிறுத்துவதா? அல்லது நடிகை சுமலதா அம்பரீசுக்கு பா.ஜனதா ஆதரவு அளிப்பதா? என்பது குறித்தும் அமித்ஷாவுடன் ஆலோசித்து தான் எடியூரப்பா இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேலும் செய்திகள்