தோகைமலை அருகே காரில் எடுத்து வந்த ரூ.1½ லட்சம் பறிமுதல்

தோகைமலை அருகே காரில் எடுத்து வந்த ரூ.1½ லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-17 22:45 GMT
தோகைமலை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுப்பதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் இரவு, பகலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ரூ.1½ லட்சம் பறிமுதல்

இதன் ஒருபகுதியாக கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள காவல்காரன்பட்டியில் நேற்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அந்த காரில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.1½ லட்சம் பணம் எடுத்து வந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து காரில் வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவர் கரூரை சேர்ந்த ரமேஷ் (வயது 35) என்பதும், கரூரில் டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்தி வருவதும் தெரியவந்தது.

பணத்திற்கு எந்தவிதமான ஆவணமும் ரமேஷிடம் இல்லாத காரணத்தால், பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் துணை அலுவலர் லியாகத்திடம் ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்