திருப்பூர், கோவை, ஈரோடு பகுதியில் ரெயில் பயணிகளிடம் நகை, செல்போன்கள் திருடிய ஆசாமி கைது

திருப்பூர், கோவை, ஈரோடு பகுதியில் ரெயில் பயணிகளிடம் நகை, செல்போன்கள் திருடிய ஆசாமியை ரெயில்வே போலீசார் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-03-17 23:57 GMT
திருப்பூர்,

கோவை, திருப்பூர், ஈரோடு பகுதியில் ரெயில் பயணிகளிடம் செல்போன், நகைகளை திருடும் ஆசாமிகளை கண்டுபிடிக்கும் வகையில் கோவை ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் உத்தரவுப்படி, போத்தனூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சவரிராஜ், செல்விராணி, அப்புசாமி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

மேலும் சென்னை சைபர் கிரைம் போலீசார் உதவி யுடன் திருட்டு ஆசாமிகளை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஆசாமி திருப்பூர் ரெயில் நிலைய பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் உடனடியாக விரைந்து சென்று அந்த ஆசாமியை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், அவர் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே சாம்பவர் வடகரையை சேர்ந்த மணிகண்டன் என்கிற அய்யப்பன்(வயது 40) என்பதும் இவர் ரெயில் பயணிகளிடம் 7 பவுன் நகைகள், 5 செல்போன்கள், 1 மடிக்கணினி ஆகியவற்றை திருடிய சம்பவங்களில் தொடர்புடையவர் என்பதும் கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து 5 பவுன் நகை, 5 செல்போன்கள், 1 மடிக்கணினி ஆகியவற்றை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் செய்திகள்