ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் விற்க தடை கலெக்டர் அண்ணாதுரை தகவல்

ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்தார்.

Update: 2019-03-18 22:30 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்து பிரதான தொழிலாக உள்நாட்டு மீன்வளர்ப்பு உள்ளது. உள்நாட்டு மீன்வளர்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன் வகைகளான கட்லா, ரோகு, மிர்கால் மற்றும் சீன பெருங்கெண்டை மீன் வகைகளான வெள்ளிக்கெண்டை, புல்கெண்டை, சாதாக்கெண்டை மற்றும் மரபியல் மேம்படுத்தப்பட்ட வளர்ப்பு திலேப்பியா, கொடுவா மீன் குஞ்சுகளை தேர்வு செய்து விவசாயிகள் மீன்வளர்ப்பு பணியில் ஈடுபட்டு உரிய வருவாயை ஈட்டி வருகின்றனர்.

மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வகை மீன், நீர்வாழ் உயிரினங்களையும், வேறு வகை மீன்களையும் அதி தீவிரமாக இரையாக உண்ணும் தன்மை உடையதால் நமது பாரம்பரிய மீன்கள் மற்றும் வளர்ப்பு மீன்களையும், அவற்றின் முட்டைகளையும் முற்றிலும் அழித்துவிடும். இதனால் நமது நீர்நிலைகளில் உள்ள அனைத்து பாரம்பரிய நீர்வாழ் உயிரினங்கள் அழிய வாய்ப்பு உள்ளது.

இந்த மீன்கள், பாரம்பரிய உள்நாட்டு கெளுத்தி மீன்களுடன் இனப்பெருக்கம் மேற்கொண்டு அவற்றின் மரபியலை சிதைத்து ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் பல்பெருக்கமடையும் வல்லமையுடையது. ஒரு காலகட்டத்தில் அனைத்து நீர்நிலைகளிலும் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை தவிர பிற மீன்கள் இல்லாமல் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.

எனவே மத்திய, மாநில அரசுகளினால் தடை செய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது தொடர்பான புகார் ஏதேனும் வந்தால் அந்த மீன்களை முற்றிலும் அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வகை மீன்களை பொதுமக்கள் வாங்க வேண்டாம்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்