முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்ய கத்தியுடன் பதுங்கிய 2 பேர் கைது

முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்ய கத்தியுடன் பதுங்கி இருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-18 22:45 GMT
திரு.வி.க.நகர்,

சென்னை புளியந்தோப்பு பின்னி மில் வளாகத்தில் கத்தியுடன் 2 வாலிபர்கள் பதுங்கி இருப்பதாக புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அப்போது அங்கு கத்தியுடன் பதுங்கி இருந்த 2 பேரை மடக்கிப்பிடித்தனர். திடீரென பிடிபட்ட வாலிபரில் ஒருவர் அருகில் உள்ள கால்வாயில் குதித்து தப்பிக்க முயற்சி செய்தார். இதில் அவரது கை முறிந்தது. இதனால் போலீசாரிடம் சிக்கினார். 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அதில் அவர்கள், புளியந்தோப்பு குருசாமி நகரைச் சேர்ந்த சதீஷ் என்ற பில்லா சதீஷ்(வயது 24) மற்றும் கன்னிகாபுரத்தைச் சேர்ந்த கோழி தலை என்ற அஜித்குமார்(24) என்பதும், இவர்கள் மீது புளியந்தோப்பு மற்றும் பேசின் பிரிட்ஜ் போலீசில் வழிப்பறி, அடிதடி வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. சதீஷ், ஏற்கனவே போக்சோ சட்டத்தில் சிறை சென்று வந்தவர் என்பதும் தெரிந்தது.

மேலும் விசாரணையில், முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம்(21) என்பவர் தங்களை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கு முன்பாக ராஜமாணிக்கத்தை கொலை செய்யும் நோக்கத்துடன் வியாசர்பாடியை சேர்ந்த சில நண்பர்களுக்காக கத்தியுடன் பதுங்கி இருந்ததும் தெரிந்தது.

சதீஷ், அஜித்குமார் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்த பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்