கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மனு கொடுத்த பெண்கள்

குடிநீர் வசதி செய்து செய்து தர கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் வந்த பெண்கள் மனு கொடுத்தனர்.

Update: 2019-03-18 22:18 GMT

சிவகங்கை,

மானாமதுரை வட்டம் தஞ்சாக்கூர் அருகே உள்ள புலவர்சேரி கிராமத்தில் சில மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லையாம். அதைத்தொடர்ந்து அந்த கிராமத்து மக்கள் தொடர்ந்து குடிநீர் வழங்க கோரி மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இந்தநிலையில் அவர்கள் கலெக்டரிடம் முறையிடுவது என்று முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று அந்த கிராமத்து பெண்கள் ஒன்றி திரண்டு வந்தனர். அவர்கள் காலிக்குடங்களுடன் சிவகங்கையில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் அதிகாரிகளிடம் மனுக்கொடுத்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:– எங்களது கிராமமான புலவர்சேரியில் சுமார் 100–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராம மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் இங்குள்ள ஆழ்துளை மோட்டார் மற்றும் தொட்டி ஆகியவை கடந்த சில மாதங்களுக்கு முன் பழுதடைந்து விட்டது. அன்றிலிருந்து பழுதினை சரிசெய்ய அதிகாரிகள் முன்வரவில்லை. இதனால் கிராம மக்களுக்கு முறையாக குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து புலவர்சேரி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்