ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2019-03-18 22:45 GMT

ராமேசுவரம்,

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 மாணவர்கள் மற்றும் அனைத்து மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய கோரியும், இலங்கை கடற்படை வசம் உள்ள தமிழக மீனவர்களின் அனைத்து படகுகளையும் விடுவிக்க வேண்டும்.

தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு இயற்றியுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்யும் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும்,பாரம்பரிய கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை பிரச்சினை இல்லாமல் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வவலியுறுத்தியும்,இலங்கை கடற்படையால் மூழ்கடிக்கப்பட்ட படகுகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க கோரியும் ராமேசுவரத்தில் நேற்று அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பஸ் நிலையம் எதிரே நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி போஸ் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநதிகள் தேவதாஸ்,சேசுராஜா,எமரிட்,சகாயம் கிளாட்வின் உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டம் முடிந்தபின் கடந்த 6 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த விசைப்படகு மீனவர்கள் வாழ்வதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.300–க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 150–க்கும் மேற்பட்ட மீனவர்கள் வடக்கு கடலான பாக்ஜல சந்தி கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர்.இந்த மீனவர்கள் அனைவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கரை திரும்புவார்கள்.

மேலும் செய்திகள்