கூலி உயர்வு கோரி தொடர் போராட்டம்: வேலை நிறுத்தத்தை ஒத்திவைக்க விசைத்தறி தொழிலாளர்கள் முடிவு

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் கூலி உயர்வு கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை ஒத்தி வைக்க முடிவு செய்து உள்ளனர்.

Update: 2019-03-18 22:30 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் மருத்துவ துணி உற்பத்தி செய்யும் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டாட்சியர் ராமச்சந்திரன், போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தரப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 2016–ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்த காலம் முடிவுறும் முன்னதாகவே வேலை நிறுத்தம் தொடங்கி உள்ளதாக உற்பத்தியாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அன்றைய ஒப்பந்தப்படி 3–ம் ஆண்டு கூலி உயர்வு இது வரை முழுமையாக வழங்கப்பட வில்லை என்பதால், முன் கூட்டியே வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி விட்டதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், 2016–ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தப்படி 3–ம் ஆண்டுக்கான கூலியை தர மறுக்கும் உரிமையாளர்கள் மீது தொழிலாளர் நலச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு உறுதி அளித்தனர்.

எனவே தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அடுத்த 3 ஆண்டுகளுக்கான புதிய கூலி உயர்வு குறித்த ஒப்பந்தம் போடுவதற்கு வருகிற ஏப்ரல் 23–ந்தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு இரு தரப்பினரும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

நாளை (புதன்கிழமை) காலை சங்கரபாண்டியபுரத்தில் நடைபெற உள்ள தொழிலாளர் மகாசபை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு தெரிவிக்கப்படும் எனவும், அதன் பின்னர் வேலை நிறுத்தத்தை திரும்ப பெற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்