சாதிகளிடையே விஷ விதைகளை விதைப்பதில் கைதேர்ந்தவர் சித்தராமையா ஈசுவரப்பா பேட்டி
சாதிகளிடையே விஷ விதைகளை விதைப்பதில் சிறந்தவர் சித்தராமையா என்று ஈசுவரப்பா கூறினார்.;
பெங்களூரு,
பா.ஜனதா தலைவர் ஈசுவரப்பா கங்காவதியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அரசியலமைப்பு சட்டப்படி குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். ரகசியத்தை காக்க வேண்டியவர், வருமான வரி சோதனை பற்றி முன்கூட்டியே தெரிந்ததை பகிரங்கப்படுத்தினார். இது சட்டவிரோதம். அவர் தான் ஒரு அறிவு இல்லாத முதல்-மந்திரி என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
மாநிலத்தின் வளர்ச்சிக்காக கூட்டணி அமைத்துள்ளோம் என்று குமாரசாமி சொல்கிறார். சுயநலத்திற்காகவும், தங்களின் தவறுகளை மூடிமறைக்கவும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இது புனிதமற்ற கூட்டணி ஆகும்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் எந்த அளவுக்கு ஒற்றுமையாக உள்ளனர் என்பது பகிரங்கமாகிவிட்டது. கூட்டணி கட்சியினரே மோதிக்கொண்டு, ஒருவரையொருவர் தோற்கடிப்பார்கள்.
சித்தராமையா ஒரு பெரிய சாதியவாதி. அவரது உடலில் சாதிவாதத்தின் ரத்தம் ஓடுகிறது. ஆனால் வெளியில், அவர் தான் ஒரு பெரிய சாதியற்ற தலைவர் என்பதை போல் காட்டிக்கொள்கிறார். அவரை போன்ற ஒரு சாதியவாதியை நான் பார்த்ததே இல்லை.
சாதி மற்றும் மதங்கள் இடையே விஷ விதைகளை விதைப்பதில் கைதேர்ந்தவர் சித்தராமையா. கூட்டணி அரசு தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக, தனது ஆதரவாளர்களை இந்த அரசுக்கு எதிராக தூண்டிவிடுகிறார்.
கூட்டணி அரசு கவிழ்ந்தால், அதன் பெருமை சித்தராமையாவை சேரும்.
இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.