ஆரணி அருகே வக்கீல் வீட்டில் ரூ.2½ லட்சம் நகை-பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
ஆரணி அருகே வக்கீல் வீட்டில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகை - பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
ஆரணி,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் ஊராட்சியில் உள்ள டி.ஆர்.எஸ். நகரில் வசித்து வருபவர் புலிகேசி (வயது 45), வக்கீல். இவரது மனைவி ரூபாவதி. ஆரணி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு நேற்று முன்தினம் வேலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டின் கதவுகள் திறந்து இருப்பதாக அக்கம் பக்கத்தினர் புலிகேசிக்கு செல்போனில் தகவல் தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து அவர் வீட்டிற்கு சென்று பார்த்த போது, வீட்டின் கதவு மற்றும் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 4 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் ரொக்கம் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.2½ லட்சம் இருக்கும்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு சென்று கைரேகைகளை பதிவு செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை - பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.