24 மணிநேர குடிநீர் வினியோக திட்டதுக்கு குடிநீர் குழாய்களை மீண்டும் பயன்படுத்த முடியுமா? நவீன தொழில்நுட்பத்தில் பரிசோதனை

கோவை நகரில் 24 மணிநேர குடிநீர் வினியோக திட்டத்துக்கு ஏற்கனவே பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை மீண்டும் பயன்படுத்த முடியுமா? என்பது குறித்து பிரான்ஸ் நாட்டு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பரிசோதனை செய்யப்படுகிறது.

Update: 2019-04-13 22:00 GMT

கோவை,

கோவை நகரில் 24 மணிநேர குடிநீர் வினியோக திட்டப்பணிகளை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ் நிறுவனம் மேற்கொள்கிறது. ஏற்கனவே நகரில் பதிக்கப்பட்ட குழாய்களின் தரத்தை பரிசோதிக்க பிரான்ஸ் நாட்டு நவீன தொழில்நுட்பமான இ–பல்ஸ் மற்றும் ஸ்கேனர் ஆகியமுறையை சூயஸ் நிறுவனம் நாட்டிலேயே முதன்முறையாக கோவையில் மேற்கொள்கிறது.

நகரில் பிரதான குழாய்கள் 111 கிலோ மீட்டர் தூரத்துக்கு பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்களை மீண்டும் பயன்படுத்த முடியுமா? அல்லது புதிதாக குழாய்கள் பதிக்க வேண்டுமா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 12 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் 10 இடங்களில் இ–பல்ஸ் மற்றும் ஸ்கேனர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இ–பல்ஸ் முறையின்படி, ஏற்கனவே பதிக்கப்பட்ட பழைய குழாய்களின் பகுதியில் ஒலி அலைகளை அனுப்பி அதன் தரம் பரிசோதிக்கப்படுகிறது. ஸ்கேனர்முறையின்படி, எலெக்டிரானிக் கருவி மூலம் பழைய குழாயின் பகுதியில் குழி தோண்டி குறிப்பிட்ட பகுதியில் ஆய்வு செய்யப்படுகிறது. ஒரு இடத்தில் ஆய்வு செய்யும்போது 200 மீட்டர் நீளம்வரை அந்த குழாயின் தரத்தை உறுதி செய்ய முடியும். கோவை நகரில் முதல் முறையாக இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:–

இ–பல்ஸ் தொழில்நுட்பத்திற்கு குழி எதுவும் தோண்டவேண்டியதில்லை. வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் குழாயில் இந்த இ–பல்ஸ் பொருத்தி சோதனை நடத்தினால் போதுமானது. ஆனால் ஸ்கேனர் தொழில்நுட்பத்திற்கு கொஞ்சம் குழி தோண்டப்பட வேண்டி இருக்கும். இந்த இரு தொழில்நுட்பங்களால் ஏற்கனவே இருக்கும் குழாய்களின் தரம் குறித்து தெரிந்து விடும். இதற்கான சோதனைக்கு 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து நெருக்கடி காரணமாக 2 இடங்களில் இந்த சோதனை கைவிடப்படுகிறது. இ–பல்ஸ் தொழில்நுட்பம் நேதாஜிபுரம், வரதராஜபுரம் பகுதிகளிலும், ஸ்கேனர் தொழில்நுட்பம் டவுன்ஹால், டி.பி.ரோடு, கே.கே.நகர், சங்கனூர் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதம் உள்ள 4 இடங்களில் வரும் நாட்களில் சோதனை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்