நகைகளுடன் மாயமானதாக கூறப்பட்ட வங்கி ஊழியர் கடலில் பிணமாக மிதந்தார் கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
நகைகளுடன் மாயமானதாக கூறப்பட்ட புதுக்கோட்டை வங்கி ஊழியர் கடலில் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
மணமேல்குடி,
புதுக்கோட்டை அருகே உள்ள திருக்கட்டளையை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள பஞ்சாப்நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி ராணி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் புதுக்கோட்டை கீழ 5-ம் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மேலும் இவர் சொந்தமாக கார் வைத்திருந்தார்.இந்நிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி வீட்டில் இருந்து காரில் சென்ற மாரிமுத்து, பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை என்று கூறி மாரிமுத்துவின் மனைவி ராணி, புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிமுத்துவிற்கு சொந்தமான கார் வல்லத்திராக்கோட்டையில் உள்ள தைலமர காட்டு பகுதியில் எரிந்த நிலையில் கிடந்தது. அந்த காரில் கவரிங் வளையல்கள் மற்றும் ஒரு ஹார்டு டிஸ்க்கும் எரிந்த நிலையில் கிடந்தன. இந்த சம்பவம் குறித்து வல்லத்திராக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாரிமுத்து திடீரென மாயமானதால், அவர் வங்கியில் இருந்து நகைகளை எடுத்து சென்று இருக்கலாம் என்று வங்கி அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். இதையடுத்து கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வங்கிகளை சேர்ந்த உயர் அதிகாரிகள், புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள வங்கியில் நகைகள் சரியாக உள்ளதாக என்று கடந்த 4 நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே காணாமல் போன மாரிமுத்துவை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.
பல கோடி மதிப்பிலான நகைகளை மாரிமுத்து எடுத்து சென்றதாக பரவிய தகவலால், அந்த வங்கியில் நகைகளை அடகு வைத்த ஏராளமானவர்கள் நேற்று முன்தினம், நகை அடகு வைத்த அட்டையுடன் வங்கி முன்பு குவிந்தனர். இதேபோல் நேற்றும் ஏராளமானவர்கள் வங்கி முன்பு குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மாலை வரை அந்த வங்கியின் சார்பில் அலுவலக உதவியாளர் மாரிமுத்து மீது எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மணமேல்குடி கோடியக்கரை கடலில் ஆண் பிணம் மிதப்பதாக மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஆண் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். இதில் இறந்தவர் மாரிமுத்தாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையிலான போலீசார், புதுக்கோட்டையில் இருந்து மாரிமுத்துவின் மனைவி ராணி மற்றும் அவருடைய உறவினர்களை அழைத்துக்கொண்டு மணமேல்குடி கோடியக்கரை கடற்கரைக்கு சென்றனர். அங்கு இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்ட மாரிமுத்துவின் மனைவி ராணி, இறந்தது தன் கணவர்தான் என்றும், அவர் அணிந்திருந்த சட்டை, தான் எடுத்து கொடுத்த சட்டைதான் என்றும் கூறி கதறி அழுதார். உறவினர்களும் அழுதனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் மணமேல்குடி அரசு டாக்டர் விஜய்யை சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். அங்கேயே மாரிமுத்துவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரிமுத்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மர்மநபர்கள் அவரை கொலை செய்தார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடகு வைத்த நகைகளுடன் மாயமானதாக கூறப்பட்ட புதுக்கோட்டை தனியார் வங்கி அலுவலக உதவியாளர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.