சிங்கம்புணரி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் நிதிஉதவி
சிங்கம்புணரி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் நிதிஉதவி கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்.;
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியம், கே.உத்தம்பட்டி கிராமத்தில் 2 தினங்களுக்கு முன்பு கருப்பையா என்பவரின் வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் சின்னம்மாள், மற்றும் அவரது மகன் வீரன், மகள் திவ்யவர்ஷினி ஆகியோர் இறந்தனர்.
இதையொட்டி இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசின் பேரிடர்மேலாண்மை துறையின் மூலம் நிவாரணத் தொகையாக தலா ரூ.4 லட்சம் வீதம் மொத்தம் ரூ.12 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை இறந்து போன சின்னமாளின் கணவர் கருப்பையாவிடம் கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்.
மேலும், வீடு முற்றிலும் சேதமடைந்ததையொட்டி தற்காலிக செட் அமைத்து கொள்ள ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்கியதுடன் நிரந்தரமாக வீடு கட்ட பசுமை வீடு திட்டத்தின் கீழ் ரூ.2.30 லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணையையும் கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளா ராமபிரதீபன், சிங்கம்புணரி தாசில்தார் பஞ்சவர்ணம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.