புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய ரூ.80 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் டிரைவர் கைது

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2019-05-05 03:30 IST
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை மரக்காணத்தை அடுத்த அனுமந்தை சுங்கச்சாவடி அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை சந்தேகத்தின்பேரில் போலீசார் வழிமறித்து சோதனை செய்ததில், அந்த காரினுள் 15 அட்டைப் பெட்டிகளில் 570 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து காரை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த முருகானந்தம் (வயது 45) என்பதும், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து முருகானந்தத்தை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்