நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம் கிணற்றில் மூழ்கி போலீஸ்காரர் மகன் பலி

சேலையூர் அருகே நண்பர்களுடன் குளித்தபோது, போலீஸ்காரரின் மகன் கிணற்றில் மூழ்கி பலியானார்.;

Update:2019-05-09 03:00 IST
தாம்பரம்,

சென்னை கிண்டி வண்டிக்காரன் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். துரைப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் விஷ்வேஸ்வரன் (வயது 20).

சேலையூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சேலையூர் அடுத்த வெங்கம்பாக்கத்தில் உள்ள விவசாய கிணற்றில் தனது நண்பர்களுடன் விஷ்வேஸ்வரன் குளிக்கச் சென்றார்.

பின்னர் அனைவரும் கிணற்றில் இறங்கி குளித்தனர். அப்போது திடீரென விஷ்வேஸ்வரன் மூழ்கியதாக தெரிகிறது. அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அவர்களால் முடியவில்லை.

உடனே இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி விஷ்வேஸ்வரனை மீட்டனர். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்