விளையாடிக்கொண்டிருந்த போது துப்பாக்கி குண்டு பாய்ந்து மாணவர் படுகாயம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
சேலத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது ஏர்கன் துப்பாக்கியில் இருந்து பால்ரஸ் குண்டு பாய்ந்து மாணவர் படுகாயம் அடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;
சேலம்,
சேலம் பொன்னம்மாபேட்டை செங்கல் அணைகவுண்டர்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் கார்த்திக் (வயது 17). இவர் அங்கு உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–1 படித்து முடித்து உள்ளார். இந்த ஆண்டு பிளஸ்–2 படிக்க உள்ளார்.
இந்த நிலையில் நேற்று கார்த்திக் தனது நண்பர்கள் 3 பேருடன் அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களில் ஒருவர் ‘ஏர்கன்‘ துப்பாக்கியை கொண்டு வந்திருந்தார். அதை வைத்து அவர்கள் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென்று துப்பாக்கியில் இருந்து ஒரு பால்ரஸ் குண்டு, வெளியேறி எதிரே நின்றிருந்த கார்த்திக்கின் மீது பாய்ந்தது.
குண்டு பாய்ந்ததால், அவரது முதுகில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. வலி தாங்க முடியாமல் அலறித்துடித்த அவர் அங்கேயே மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் படுகாயம் அடைந்த கார்த்திக்கை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள், மாணவர் கார்த்திக் உடலில் பாய்ந்து உள்ள பால்ரஸ் குண்டை எடுக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கார்த்திக் சிகிச்சை பெற்று வரும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டனர். மேலும் அவர்களுக்கு ‘ஏர்கன்‘ துப்பாக்கி எப்படி கிடைத்தது? அதற்கு உரிய லைசென்சு பெறப்பட்டு உள்ளதா? மேலும் பால்ரஸ் குண்டு யாரிடம் இருந்து வாங்கப்பட்டது என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு பாய்ந்து மாணவர் படுகாயம் அடைந்த சம்பவம் நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.