சினிமா தயாரிப்பாளரிடம் ரூ.6 லட்சத்துக்கு விற்ற கார் திருட்டு; 2 பேர் கைது

சினிமா தயாரிப்பாளரிடம் ரூ.6 லட்சத்துக்கு விற்ற காரை, அதே கும்பலே திருடியது. இது தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார், மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

Update: 2019-06-19 22:30 GMT

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மதுரவாயலை சேர்ந்தவர் தணிகை. சினிமா பட தயாரிப்பாளரான இவர், நெற்குன்றத்தை சேர்ந்த கணேசன் (40), நீலகிரியை சேர்ந்த பாரதி (38), சத்யா (37) மற்றும் ரிச்சர்டு (35) ஆகியோரிடம் இருந்து இன்னோவா காரை ரூ.6 லட்சத்துக்கு வாங்கினார்.

கடந்த 10–ந் தேதி அந்த காரில் கானத்தூரில் உள்ள விடுதிக்கு சென்றார். காரை விடுதி வளாகத்தில் நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, அந்த கார் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது பற்றி கானத்தூர் போலீசில் தணிகை புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், தணிகையிடம் அந்த காரை விற்ற கும்பலே, மீண்டும் அந்த காரை திருடிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து கணேசன், பாரதி (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் தணிகையிடம் காரை விற்ற கும்பல், அதே காரை வேறு ஒருவருக்கும் விற்றுள்ளது. எனவே அந்த நபரிடம் கொடுப்பதற்காக தணிகையிடம் விற்ற காரை திருடியது தெரிந்தது. கைதான 2 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவான சத்யா, ரிச்சர்டு ஆகியோரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்